
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). ஒரு காப்புரிமை விண்ணப்பத்தின் ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்றுள்ள ஒரு இடுகை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்துடன் கூடிய இந்த பதிவில், ரோத்ஸ்சைல்ட் என்கிற நபர் 2015 ஆம் ஆண்டிலேயே கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு காப்புரிமையை பதிவு செய்துவிட்டதாகவும், இதனால், கோவிட் -19 ஒரு மோசடி என்றும் கூறுகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், இந்த வைரல் புகைப்படம், 2015 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் முதன்மை காப்புரிமை விண்ணப்பத்தை தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாம் நிலை விண்ணப்பத்தின் ஸ்கிரீன்ஷாட் என்பதும், இது கோவிட்-19 உடன் தொடர்புடையது அல்ல என்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த முதன்மை விண்ணப்பம் “உயிரளவையியல் (பயோமெட்ரிக்) தரவைப் பெறுதல் மற்றும் பரிமாற்றம்” செய்வது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், இது குறித்த இந்த பதிவே தவறான கூற்றுடன் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் விசாரணையில் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
கூற்று
சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு இடுகையொன்று, ஓர் காப்புரிமை விண்ணப்பத்தின் ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டுகிறது. அதில் “இந்த கோவிட் 19 மோசடி பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்படவில்லை என்று எண்ணாதவர்களே… 2015 ஆம் ஆண்டிலேயே கோவிட் 19 காப்புரிமைக்கு ரோத்ஷைல்ட் அவர்கள் எவ்வாறு பதிவு செய்தார் என்பதை விளக்குங்கள்..?!?! .. அதுவும் 5 வருடங்களுக்கு முன்பு?!?” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
காப்புரிமை விண்ணப்பத்தின் ஸ்கிரீன்ஷாட், காப்புரிமை விண்ணப்பம் ‘ரிச்சர்ட் A. ரோத்ஸ்சைல்ட்’ என்ற விண்ணப்பதாரரால் “கோவிட் -19 ஐ சோதனை செய்வதற்கான முறைகள் மற்றும் வழிகள்” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
இந்த ஸ்கிரீன்ஷாட்டின் படி 17 மே 2020 அன்று விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 அக்டோபர் 2015 அன்று ஒரு ‘தற்காலிக விண்ணப்பம்’ பதிவு செய்யப்பட்டது என்றும் அந்த ஆவணத்தில் இருக்கும் சிறப்பிக்கப்பட்ட (எடுத்துக்காட்டப்பட்ட) பகுதி கூறுகிறது.
இ ஸ்பேஸ் நெட்டின் இணையதளத்தில் இந்த காப்புரிமையைத் தேடுவதின் மூலம் நாங்கள் விசாரணையை துவங்கினோம். இ ஸ்பேஸ் நெட்டின் வலைத்தளம், காப்புரிமைகள் மற்றும் விண்ணப்பங்களை தேடுவதற்கான ஒரு தளமாகும். இது உலகம் முழுவதிலுமிருந்து பல காப்புரிமை ஆவணங்களின் தரவுகளைக் கொண்டுள்ளது.
இது குறித்து தேடியதில், இ ஸ்பேஸ் நெட்டில் “கோவிட்-19 க்கான சோதனை முறைகள் மற்றும் வழிகள்” என்ற பெயரில் விண்ணப்பம் ஒன்று பட்டியலிடப்பட்டிருப்பதைக் நாங்கள் கண்டோம்.
தற்போது பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த விண்ணப்பம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் தொடர்ச்சியே என்பதை அதிலிருந்த ஆவணத்தின் மூலமாக நாங்கள் கண்டறிந்தோம். ரோத்ஸ்சைல்ட் உடைய இந்த காப்புரிமை ஆரம்பத்தில் 2015 ஆம் ஆண்டில் “உயிரளவையியல் (பயோமெட்ரிக்) தரவைப் பெறுதல் மற்றும் பரிமாற்றம்” செய்வது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், காப்புரிமையின் சுருக்கத்தின்படி, அதே விண்ணப்பம் பின்னர் ‘கோவிட்-19 போன்ற வைரஸ் தொற்றுநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைத் தீர்மானிக்கும் முறை’ என்ற பெயரில் மே 2020 இல் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கூகுள் காப்புரிமைகள் வழியாக தேடிய பொழுதிலும், இந்த விண்ணப்பத்தை எங்களால் காண முடிந்தது.
இது குறித்து அறிந்துகொள்ள காப்புரிமை நிபுணரான மன்பிரீத் கவுரை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், “ இந்த கூற்று தவறானது. இந்த புகைப்படம் 2020 இல் பதிவு செய்யப்பட்ட இரண்டாம் நிலை விண்ணப்பத்தின் ஸ்கிரீன்ஷாட் ஆகும். முதன்மை விண்ணப்பம் 2020 ஆம் ஆண்டில் ரோத்ஷைல்ட்டினால் திருத்தப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்புரிமை விண்ணப்பம் 2020 இல் திருத்தப்பட்டதால், 2015 ஆம் ஆண்டில் இது கோவிட்-19 சோதனைக்காக பதிவு செய்யப்பட்டது என்ற கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை,” என்று கூறினார்.
இந்த இடுகையை கிளின்டன் வென்ஸ்லி என்ற பயனர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அவர் சுயவிவரத்தினை ஆராய்ந்ததில், அவரைப் பற்றி அதிக விவரங்களை அவர் அதில் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.
निष्कर्ष: விஸ்வாஸ் செய்தி இந்த இடுகையை குறித்து ஆராய்ந்ததில், இந்த வைரல் புகைப்படம் 2015 ஆம் ஆண்டில் முதன்மை காப்புரிமை விண்ணப்பத்தை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாம் நிலை விண்ணப்பத்தின் ஸ்கிரீன்ஷாட் என்பதும், இது COVID-19 உடன் தொடர்புடையது அல்ல என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த முதன்மை விண்ணப்பம் ‘உயிரளவையியல் (பயோமெட்ரிக்) தரவைப் பெறுதல் மற்றும் பரிமாற்றம்’ செய்வது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், இந்த பதிவு தவறான கூற்றுடன் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் இந்த விசாரணையில் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.