உண்மை சரிபார்ப்பு: புகைப்படத்தில் ஜோ பைடனுடன் உள்ள குழந்தை ஃபிளாய்ட் மகள் அல்ல, வைரல் கூற்று தவறானது
இந்த வைரல் பதிவு தவறானது. ஜோ பைடன் டெட்ராய்டில் உள்ள ஒரு ஆடை கடையின் உரிமையாளரின் குழந்தையுடன் பேசுவதுதான் அந்த புகைப்படத்தில் உள்ளதே தவிர, அப்புகைப்படத்தில் இருக்கும் அந்த குழந்தை ஜார்ஜ் ஃபிளாய்ட் மகள் கியானா அல்ல.
- By Vishvas News
- Updated: November 18, 2020

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). புதிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், காவல்துறையினரால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட கறுப்பின மனிதரான ஜார்ஜ் ஃபிளாய்ட் மகளிடம் மன்னிப்பு கோருவதாகக் கூறி, ஜோ பைடனின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தி விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர் அந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை ஃபிளாய்ட் மகள் அல்ல என்பதை நமக்குத் தெளிவுபடுத்தினார்.
கூற்று
புதிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் ஒரு குழந்தைக்கு முன் மண்டியிடும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அதில் “அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆட்சிகாலத்தில் கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளையின அமெரிக்க போலீசாரால் கழுத்து நெரித்து பகிரங்கமாக கொலை செய்யப்பட்ட கறுப்பின நபரின் மகளின் முன் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன், ” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வைரல் இடுகையை இங்கே காணலாம்.
பல பயனர்களும் இந்த புகைப்படத்தை இதே போன்ற கூற்றுடன், பேஸ்புக் போன்ற பல சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர்.
விசாரணை
ஜார்ஜ் ஃபிளாய்ட் என்கிற 46 வயதான ஆப்பிரிக்க-அமெரிக்கர், மினியாபோலிஸில் ஒரு வெள்ளை காவல்துறை அதிகாரியால் கைவிலங்கு அணிவிக்கப்பட்டு, தரையில் தள்ளப்பட்டு, காவல்துறை அதிகாரியின் கால்களினால் கழுத்து நெரிக்கப்பட்டதால், மே 25 அன்று இறந்தார். “இந்த பரபரப்பான சம்பவத்தின் காட்சிப்பதிவானது, அங்கிருந்த ஒரு பார்வையாளரால் பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, மக்கள் போராட்டத்திற்கு அடித்தளமிட்டு, எஃப்.பி.ஐ மனித உரிமைப் பிரிவின் விசாரணைக்கு வழிவகுத்து, இறுதியாக மினியாபோலிஸ் காவல்துறை மூன்று காவல் அதிகாரிகளை அதிரடி நீக்கம் செய்வதற்கும் வழிவகுத்தது,” என்று நியூயார்க் டைம்ஸின் ஒரு கட்டுரை கூறுகிறது.

இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் கழித்து, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 2020 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார். “பென்ஸில்வேனியாவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிடன் டொனால்ட் டிரம்பை 279 தேர்தல் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். டிரம்ப் இன்னும் 214 வாக்குகள் என்ற எண்ணிக்கையில் நீடிக்கிறார், ”என்று நவம்பர் 8 அன்று வெளியிடப்பட்ட டைனிக் ஜாக்ரானின் ஒரு கட்டுரை கூறுகிறது.

அமெரிக்க அதிபராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், ஜார்ஜ் ஃபிளாய்டின் மகளை சந்தித்தது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், ஃப்ளாய்டின் மகளின் வார்த்தைகளை பைடன் நினைவு கூர்வது குறித்து ஆகஸ்ட் 21 அன்று வெளியிடப்பட்ட கட்டுரைகளை நாங்கள் கண்டறிந்தாலும், இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த செய்தி அறிக்கையும் எங்களால் காண முடியவில்லை.
இந்த வைரல் புகைப்படத்தின் உண்மையான மூலத்தைக் கண்டறிய, கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி அதனைத் தேடினோம்.
அவ்வாறு தேடியதில், அவுட்லுக் இந்தியா வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படத்தை நாங்கள் கண்டோம். அதன் விளக்கத்தில், “ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தன் பேரக்குழந்தைகளுக்காக பரிசுகள் வாங்க டெட்ராய்ட் உள்ள கடைகளுக்கு சென்றபோது, Three Thirteen கடைகளின் உரிமையாளராகிய கிளெமென்ட் பிரவுனையும், அவரது மகனான CJ பிரவுனையும் (வலது) சந்தித்தார். பைடன் தற்போது தனது பிரச்சார நிகழ்வுகளுக்காக மிச்சிகனுக்கு செல்லவிருக்கிறார்,” என்று கூறப்பட்டுள்ளது.
இது தவிர, அதிபர் ஜோ பைடனின் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் இந்த புகைப்படத்தைக் நம்மால் காண முடிந்தது.

வட அமெரிக்காவைச் சேர்ந்த ராய்ட்டர்ஸ் பிக்சர்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் கொரின் பெர்கின்ஸ் வெளியிட்ட ட்வீட்டில் இந்த புகைப்படம் இடம்பெற்று இருப்பது மட்டுமல்லாது, இந்தப் புகைப்படத்தை எடுத்தவராக லியா மில்லிஸையும் அது அடையாளம் காட்டுகிறது.
வைரல் கூற்றினை சரிபார்க்க நாங்கள் வாஷிங்டனின் ராய்ட்டர்ஸில் சேர்ந்த மூத்த புகைப்படக் கலைஞர் லியா மில்லிஸைத் தொடர்பு கொண்டோம். ஆவணப்படுத்தப்பட்ட புகைப்படத்திற்கான இணைப்பை எங்களுடன் பகிர்ந்த மில்லிஸ், புகைப்படத்தில் உள்ள சிறுவன் டெட்ராய்டைச் சேர்ந்தவன் என்றும், அது ஃப்ளாய்டின் மகள் கியானா அல்ல என்றும் நமக்குத் தெளிவுபடுத்தினார்.
மேலும் கியானாவின் காணொளியை பகிர்ந்துகொண்ட அவர், இந்த வைரல் புகைப்படத்தில் உள்ள குழந்தை வேறு என்பதை அடையாளம் காண எங்களுக்கு உதவினார்.

இது தவிர, இது போன்ற தவறான கூற்றுக்களை மறுத்து தான் வெளியிட்டிருக்கும், ஒரு ட்வீட்டையும் நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனர் KA முஸ்தபாவின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டின் ஊட்டியைச் சேர்ந்தவர் என்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 7,418 பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. ஜோ பைடன் டெட்ராய்டில் உள்ள ஒரு ஆடை கடையின் உரிமையாளரின் குழந்தையுடன் பேசுவதுதான் அந்த புகைப்படத்தில் உள்ளதே தவிர, அப்புகைப்படத்தில் இருக்கும் அந்த குழந்தை ஜார்ஜ் ஃபிளாய்ட் மகள் கியானா அல்ல.
- Claim Review : அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆட்சிகாலத்தில் கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளையின அமெரிக்க போலீசாரால் கழுத்து நெரித்து பகிரங்கமாக கொலை செய்யப்பட்ட கறுப்பின நபரின் மகளின் முன் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன்
- Claimed By : பேஸ்புக் பயனர் KA முஸ்தபா
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Telegram 9205270923
-
Email-Id contact@vishvasnews.com