
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவிற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவு கூறுகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தி விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. மேலும் டாக்டர் மன்மோகன் சிங்கின் அலுவலகமும் இந்த கூற்றை மறுத்துள்ளது.
கூற்று
ராகேஷ் படேல் என்ற பேஸ்புக் பக்கம், கடந்த 9 ம் தேதி அன்று, முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங்கின் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி, “அமெரிக்காவின் புதிய அதிபரின் பதவியேற்பு விழாவின் முதன்மை விருந்தினராக டாக்டர் மன்மோகன் சிங் ஜி கலந்து கொள்வார்,” என்று எழுதியுள்ளது. இந்த இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
தற்போது நடந்து முடிந்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், கடுமையான போட்டிக்கு நடுவே ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடித்துள்ளார். இவர், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வயதான அதிபர் ஆவார். 77 வயதான இவர், முன்னாள் துணை அதிபராக பணியாற்றி, தற்போது அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவியேற்க உள்ளார்.
பைடனின் இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்திய பயனர்கள் பலரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று கூறிடும் ஒரு வைரல் பதிவைப் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த செய்திகளுக்காக இணையத்தில் தேடியதில், இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இருப்பினும், இத்தகைய கூற்றுக்களை மறுத்திடும் பல அறிக்கைகளை எங்களால் காண முடிந்தது.
இந்த கூற்றினைச் சரிபார்க்க டாக்டர் மன்மோகன் சிங்கின் அலுவலகத்தை நாங்கள் தொடர்பு கொண்டோம். இந்த கூற்றுக்களை மறுத்த அவரின் செய்தித் தொடர்பாளர், “இந்த வைரல் கூற்று தொடர்பாக கடந்த சில நாட்களாக எங்களுக்குப் பல அழைப்புகள் வந்துள்ளன. இந்த வைரல் கூற்று தவறானது. டாக்டர் மன்மோகன்சிங்கிற்கு இதுவரை இதுபோன்ற எந்த அழைப்பும் வரவில்லை,” என்று கூறினார்.
டைனிக் ஜாக்ரானின் இணை செய்தித்தாளான நைதுனியாவில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி அறிக்கையில், “20 ஜனவரி 2021 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் 46 வது அதிபராக, வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை ஜோ பைடன் ஏற்றுக்கொள்வார். அமெரிக்க வரலாற்றிலேயே மிக வயதான அதிபராக இவர் இருப்பார். இவர் இரண்டு முறை அமெரிக்காவின் துணை அதிபராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் என்பவரே அமெரிக்காவின் அடுத்த துணை அதிபராக இருப்பார்,” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வைரல் கூற்றினைப் பகிர்ந்துள்ள பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், இப்பக்கத்திற்கு 3,843 பின்தொடர்பவர்கள் இருப்பதும், 21 ஏப்ரல் 2019 முதல் இப்பக்கம் செயலில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது. இந்த பக்கத்தின் சுயவிவரத்தின்படி, இப்பக்கத்தின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் அலுவலகம் தங்களுக்கு இதுவரை இதுபோன்ற எந்த அழைப்பும் வரவில்லை என்று கூறி, இத்தகைய கூற்றுக்களை மறுத்துள்ளது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.