உண்மை சரிபார்ப்பு: பாஜக எம்.பி. மீது மை வீசும் பழைய காணொளி தவறான கூற்றுடன் வைரலாகிறது
2016 ஆம் ஆண்டில் எம்.பி. சைனி மீது இளைஞர்கள் மை வீசிய காணொளியே தற்போது பாஜக தலைவரை விவசாயிகள் தாக்கினார்கள் என்ற தவறான கூற்றுடன் வைரலாகியுள்ளது.
- By Vishvas News
- Updated: September 29, 2020

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்). ஹரியானாவில் விவசாயிகள் பாஜக தலைவரை சாணியை பூசி செருப்பால் அடித்து தாக்கியதாகக் கூறி சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பாஜக தலைவர்கள் சத்யம் சிங், ராஜ்குமார் சைனி ஆகியோரின் பெயர்களுடன் பல பயனர்களும் இந்தக் காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்பதும், அந்த காணொளி சுமார் 4 ஆண்டுகள் பழமையானது என்பதும், இது குருக்ஷேத்ராவைச் சேர்ந்த பாஜகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராஜ்குமார் சைனி மீது சிலர் மை வீசியபோது எடுக்கப்பட்ட காணொளி என்பது தெரியவந்துள்ளது.
கூற்று
ஹரியானாவில் விவசாயிகள் பாஜக எம்.பி. சத்யம் சிங்கை சுற்றி வளைத்து தாக்கியதாக கூறி பேஸ்புக் பயனர் விஜய் யதுவன்ஷி சர்பஞ்ச் இந்தக் காணொளியை பதிவேற்றியுள்ளார். அதே போன்று பாஜக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சைனி தாக்கப்பட்டார் என்ற கூற்றுடன் இதே காணொளியை மற்றொரு பயனரும் பகிர்ந்துள்ளார்.
மேலும் ‘நெற்றியில் சந்தனம் வைப்பது போல் அருகில் சென்று ஹரியானா பிஜேபி எம்.எல்.ஏ முகத்தில் சாணியை பூசி செருப்பால் அடித்த விவசாயிகள். விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!’ என்ற கூற்றுடன் பேஸ்புக் பயனர் சங்கீதா P என்பவரும் இதே காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

விசாரணை
இந்தக் காணொளி குறித்து இணையத்தில் தேடியதில், நவம்பர் 7, 2016 அன்று பஞ்சாப் கேசரியின் யூடியூப் சேனலால் இதே காணொளி பதிவேற்றப்பட்டிருப்பதை எங்களால் காண முடிந்தது. அதில் பாஜக எம்.பி. சைனி மீது சிலர் மை தெளித்ததாக விளக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடக் நியூஸின் யூடியூப் சேனலிலும் இதே காணொளியை எங்களால் காண முடிந்தது. அதில் “பாஜக எம்.பி. ராஜ்குமார் சைனி மீது மை தெளிக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதில் ஒரு நபர் சைனி மீது மை வீசுவதை நாம் காணலாம்…” என்று கூறப்பட்டிருந்தது.
இவற்றின் மூலம் இந்தக் காணொளி பழையது என்பதையும், அதில் இருப்பவர் ராஜ்குமார் சைனி என்பதையும் எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.
ஜாக்ரான்.காமில் 13 நவம்பர் 2016 அன்று வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின்படி, அந்த மை தாக்குதலுக்குப் பிறகு தனக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்ததாக சைனி கூறியுள்ளார்.

இதே சம்பவம் குறித்து 16 அக்டோபர் 2016 அன்று பத்ரிகா இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி கட்டுரையையும் எங்களால் காண முடிந்தது.
இந்தக் கூற்றினைச் சரிபார்க்க டைனிக் ஜாக்ரானின் குருக்ஷேத்ரா பொறுப்பாளர் ஜக்மஹேந்திர சரோஹாவைத் தொடர்புகொண்டோம். இது குறித்து பேசிய அவர் “இந்தக் காணொளி பழையது. இது சைனி எம்.பி.யாக இருந்தபோது எடுக்கப்பட்டது. தேர்தலுக்குப் பின்னர் அவர் எந்த மேடையிலும் தோன்றவில்லை,” என்றார்.
இந்த வைரல் காணொளியைப் பகிர்ந்த பேஸ்புக் பயனர் விஜய் யதுவன்ஷியின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு 8,707 பின்தொடர்பவர்கள் இருப்பது தெரியவந்தது.
இந்த வைரல் காணொளியை பகிர்ந்த பேஸ்புக் பயனர் சங்கீதா P இன் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவி என்பது தெரியவந்தது.

निष्कर्ष: 2016 ஆம் ஆண்டில் எம்.பி. சைனி மீது இளைஞர்கள் மை வீசிய காணொளியே தற்போது பாஜக தலைவரை விவசாயிகள் தாக்கினார்கள் என்ற தவறான கூற்றுடன் வைரலாகியுள்ளது.
- Claim Review : நெற்றியில் சந்தனம் வைப்பது போல் அருகில் சென்று ஹரியானா பிஜேபி எம்.எல்.ஏ முகத்தில் சாணியை பூசி செருப்பால் அடித்து விவசாயிகள் தாக்கியதாகக் கூறி பகிரப்படும் காணொளி
- Claimed By : FB User P Sangeetha
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Email-Id contact@vishvasnews.com