
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பீகாரில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பேரணியின் போது எடுக்கப்பட்டதாகக் கூறி ஒரு பெரிய கூட்டத்தின் புகைப்படம் ஒன்று வேகமாய் பகிரப்பட்டு வருகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தி விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வைரல் புகைப்படம் 2014 ல் நடந்த பிரதமர் நரேந்திர மோடியின் கொல்கத்தா பேரணியின் போது எடுக்கப்பட்டதே தவிர, இது பீகாரில் நடந்த ஆதித்யநாத்தின் பேரணிபோது எடுக்கப்பட்டது அல்ல என்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
கூற்று
பேஸ்புக் பயனரான சுரேந்திரன் கோத்தண்டபாணி அக்டோபர் 22 அன்று ஒரு படத்தை பதிவேற்றி, “கொள்ளை அடிக்கவேண்டும்..மக்களின் பணத்தை அல்ல..மக்களின் மனதை.கோடான கோடி மக்களின் உள்ளத்தை கொள்ளை அடித்த யோகி ஆதித்யநாத்திற்கு கூடிய கூட்டம் இது. அதுவும் பீகாரில்,” என்று எழுதியுள்ளார். இந்த பேஸ்புக் இடுகையை இங்கே காணலாம்.
மற்றொரு பேஸ்புக் பயனரான நீரஜ் வர்மா அக்டோபர் 21 அன்று ஃபேஸ்புக் குழுவான மோடி சேனாவில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி, “பீகாரில் நடந்த பேரணியில் யோகி ஆதித்யநாத் ஜியின் சொற்பொழிவைக் கேட்க கூட்டம் கூடியது. சமவெளிகள் எங்கும் ஜெயஸ்ரீராம் கோஷங்கள் எதிரொலித்தது,” என்று எழுதியுள்ளார்.
பல பயனர்களும் இதே புகைப்படத்தை வெவ்வேறு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
விசாரணை
நாங்கள் முதலில் இந்த வைரல் புகைப்படத்தைக் கவனித்தோம். புகைப்படத்தின் தரம் மிகவும் மோசமாக இருந்ததால் அது பழையது என்பதை அடையாளம் கண்டோம். அதன்பின் கூகுள் தலைகீழ் படத் தேடலைப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், தேஷ்குஜராத் வலைத்தளத்தில் 5 பிப்ரவரி 2014 அன்று வெளியிடப்பட்ட கட்டுரையில் இந்தப் புகைப்படத்தைக் கண்டோம். அந்தக் கட்டுரையில், “பாஜகவின் மக்கள் பிரதிநிதிகள் இந்த மாநிலத்தில் மிகக் குறைவாக இருக்கின்ற போதிலும், மோடியின் பேரணிக்கு இத்தனை கூட்டம் கூடியுள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்த வார்த்தைகளைப் (கொல்கத்தாவில் நரேந்திர மோடியின் 2014 பேரணி) பயன்படுத்தி, செய்தி அறிக்கைகளைத் தேடினோம். அவ்வாறு தேடியதில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் நடக்கும் மிகப்பெரிய பேரணியில், பிரதம மந்திரி வேட்பாளரான நரேந்திர மோடி பிரிகேட் பரேட் மைதானத்தில் பொதுமக்கள் முன் உரை நிகழ்த்தவுள்ளார் என்று விவரிக்கும் ஒரு காணொளியை நியூஎக்ஸ் யூடியூப் சேனலில் கண்டோம்.
கெட்டி இமேஜஸ் (Getty Images) இணையதளத்திலும் இந்த வைரல் புகைப்படத்திற்கு ஒத்த ஒரு புகைப்படத்தை நாங்கள் கண்டோம். இந்த புகைப்படங்களில் மேடைக்கு பின்னால் இருந்த விரிப்புகள் பச்சை வண்ணத்தில் இருந்ததையும், கூடாரம் ஒன்று நீல நிறத்தில் இருந்ததையும் எங்களால் அடையாளம் காண முடிந்தது.
பீகார் தேர்தலில் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்ததை பல செய்தி அறிக்கைகளும் நமக்கு உறுதி செய்தன. ஆதித்யநாத் 20 அக்டோபர் 2020 முதல் பிரச்சாரத்தைத் தொடங்கி பீகாரில் இதுவரை பல பேரணிகளை நடத்தியுள்ள போதிலும், இந்த வைரல் புகைப்படம் அவரது எந்த பேரணியின்போதும் எடுக்கப்படவில்லை என்பதை நம்மால் உறுதிபடுத்த முடிந்தது.
இந்த கூற்றினை நாங்கள் சரிபார்க்க, டைனிக் ஜாக்ரானின் பீகார் பொறுப்பாளர் அமித் ஆலோக்கை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், யோகி ஆதித்யநாத்தின் பேரணிகள் பீகாரில் தொடங்கியிருந்தாலும், இந்த வைரல் புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டதல்ல என்று கூறினார்.
வைரல் புகைபடத்தைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தமிழ்நாட்டின் சென்னையில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.
निष्कर्ष: வைரல் பதிவு தவறானது. நரேந்திர மோடியின் 2014 பேரணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் பீகாரில் யோகி ஆதித்யநாத்தின் பேரணியில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு தற்போது தவறான கூற்றுடன் வைரலாகியுள்ளது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.